அன்புள்ள அம்மா அவர்களுக்கு,
எனக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. இரண்டு குழந்தைகள் உள்ளனர். என் கணவர், சமுதாயத்தில் அனைவரும் மதிக்கக்கூடிய ஒரு பணியில் உள்ளார். இந்தப் பணி என் திருமணத்திற்குப் பிறகுதான் அவருக்குக் கிடைத்தது. ஒரு நல்ல நிலைக்கு வந்தபின், வேறு ஊருக்கு அவருக்கு மாற்றலாகியது. அப்போது அங்குள்ள அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண் (விதவை, 2 குழந்தைகளுக்கு தாய்) என் கணவருக்கு பலவித கடிதங்கள் எழுதி, அவரை மயக்கி விட்டாள். அவளை பார்ப்பதற்கு முன் வரை அவர், என்னைத் தவிர வேறு எந்தப் பெண்ணிடமும் அதிகம் பேசக் கூட மாட்டார். அவள் சாதாரணமாக என் வீட்டிற்கு, மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை வந்து என்னிடம் மட்டும் பேசிவிட்டு போவாள். அவள் கஷ்டங்களை கூறுவாள். அவள் நல்லவள் என்று நான் நினைத்திருந்தேன். ஆனால், நாங்கள் அங்கு வருவதற்கு முன்பே என் கணவரைப் போல் பணியிலிருந்தவரிடம் (திருமணமாகாதவர்) பழகி, திருமணம் வரை சென்று, நின்று விட்டது. அந்த ஆள் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். நான், என் சொந்தங்களைப் பார்க்க வெளியூர் சென்றிருக்கும் போது, என் வீட்டிலேயே, "எல்லா' விஷயங்களும் நடந்துள்ளன. நான் அவள் எழுதிய கடிதங்களைப் பார்த்துவிட்டு அவளை கன்னாபின்னா என்று திட்டி, "இனி, என் வீட்டிற்கு வரக் கூடாது! இந்த மாதிரி கடிதங்கள் எழுதக் கூடாது...' என்று கூறினேன். அதன் பின் எங்கள் வீட்டிற்கு வருவதில்லை. எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைத்திருந்தேன். அவளும் வேறு ஊருக்கு மாற்றப்பட்டாள். (என் கணவரின் நண்பர் மூலம்.) ஆனால், அவள் வீட்டை மட்டும் காலி பண்ணவில்லை. சனி, ஞாயிறு போன்ற விடுமுறை தினங்களில் வந்து தங்கி விடுகிறாள். என் கணவரின் அலுவலக முகவரி மூலமாக கடிதத் தொடர்பு இருந்திருக்கிறது; எனக்கு தெரியாது. ஒருநாள் அலுவலக முகவரிக்கு வந்த கடிதத்தை வீட்டிற்கு வந்து கொடுத்தனர். அதன் மூலம்தான் இன்னும் தொடர்பு உள்ளது என தெரிந்து கொண்டேன். என் கணவர் நண்பராகத்தான் அவளிடம் பழகுகிறார் என்று நினைத்திருந்தேன். ஒரு சந்தேகத்தில் அவரிடம் தனியாக விசாரித்தபோது, ஐந்து வருடமாக அவளிடம் எல்லாத் தொடர்பும் இருந்திருக்கிறதென்று தெரிந்தது. ஊருக்கு அவர் தனியாக செல்லும்போது, நான் எப்போதாவது ஊருக்கு குழந்தைகளுடன் சென்றிருக்கும்போது, பிறகு, அலுவலகம் செல்வதாகக் கூறி, வாரத்திற்கு ஒரு முறை என்று எல்லாம், அவர்கள் பழக்கம் நீடித்துள்ளது. இது தெரிந்தவுடன், அவள் எதிரிலேயே என் கணவரை கன்னாபின்னாவென்று அடித்து, "என்னிடம் என்ன இல்லை என்று ஓடினாய்?' என்று கேட்டேன். அவள் காலில் விழுந்து, "என் கணவரை விட்டு விடு...' என்று கெஞ்சினேன். பிறகு, "உனக்கு அவர் வேண்டுமென்றால் கூறி விடு, நான் ஒதுங்கிக் கொள்கிறேன்...' என்று கூறினேன். அவள் வேண்டாமெனக் கூறினாள். "அப்படியென்றால், இனி என் வாழ்க்கையில் நீ குறுக்கிடக் கூடாது...' என்று அவளிடம் கூறினேன். என் கணவரிடம், "எந்தப் பெண்ணுடனாவது வாழ விருப்பமிருந்தால் என்னிடம் சொல்லி விடுங்கள். நான் சந்தோஷமாக உங்களை விட்டு ஒதுங்கி விடுகிறேன்...' என்று கூறியிருக்கிறேன். அதன்பின், ஒரு வருடமாக அவர் எங்கும் தனியாக செல்வதில்லை. அதன்பிறகு அவளை பார்க்கவில்லை என்று கூறினார். அவரும் ஒழுங்காக என்னிடம் நடந்து கொள்கிறார். அலுவலகத்திற்கு பக்கத்திலேயே எங்கள் வீடு உள்ளது. அலுவலகம் சென்றுவிட்டு உடனே வீட்டிற்கு வந்து விடுகிறார். ஆனால், பழைய விஷயங்கள் மனதில் வந்து, "இப்படியெல்லாம் என் கணவர் நடந்து கொண்டுவிட்டாரே...' என்று நினைத்து தினமும் அழுகிறேன். இவ்விஷயம், எங்கள் இருவர் குடும்பத்திலும் யாருக்கும் இதுவரை தெரியாது. இந்த விஷயத்தை அவள் கூறிய உடனேயே தற்கொலை செய்து கொள்ள எண்ணினேன். ஆனால், என் குழந்தைகள் அனாதைகளாவதை நான் விரும்பவில்லை. அவர்களுக்காகவே வெளியில் எல்லாரிடமும் சந்தோஷமாக சிரித்துப் பேசி நடித்துக் கொண்டிருக்கிறேன். முன்பெல்லாம் என் கணவர் வெளியில் சென்றால், அவர் வீட்டிற்கு வரும் வரை, வண்டியில் செல்வதால் அடிபடாமல் பத்திரமாக வர வேண்டும் என்பதற்காக, "கடவுளே என் புருஷனை காப்பாற்று' என்று என் வாயில் எப்போதும் முனகிக் கொண்டே இருப்பேன். ஆனால், இப்போது அந்த மாதிரியெல்லாம் வருவதில்லை. வாழ்க்கை வெறுத்து விட்டது. அவரை விட்டு தனியாக பிரிந்து வாழ வேண்டும் போல் தோன்றுகிறது. ஆனால், அவர் இதுவரை மனம் திறந்து எதுவும் பேசவில்லை. அவரை விட்டு நான் பிரிந்து விட்டால், அவரால் நிச்சயமாக வாழ முடியாது. அது மட்டும் எனக்குத் தெரியும். எனக்கு இந்த நினைவிலிருந்து விடுதலை வேண்டும். எப்படி மறப்பது என்று புரியவில்லை. இன்னும் இரண்டு வருடங்களாவது இந்த ஊரில் இருந்தே ஆக வேண்டும். அதன்பிறகு தான் எங்கள் சொந்தங்கள் இருக்கும் ஊர் பக்கம் மாற்றல் வாங்கிச் செல்ல முடியும். அதுவரை எனக்கு பைத்தியம் பிடிக்காமல் இருக்குமா என சந்தேகமாக உள்ளது. மீண்டும் அவள் என் வாழ்க்கையில் குறுக்கிட்டு விடுவாளோ என பயமாக உள்ளது. இந்த பயமும், பழைய நினைவுகளும் என்னை அலைக்கழிக்கின்றன. இதற்கு தங்களின் ஆலோசனையை அறிய விரும்புகிறேன். — இப்படிக்கு, வாழ்க்கையை தவறவிட்ட ஒரு பெண். அன்பு மகளுக்கு — உன் கடிதம் கிடைத்தது. உன்னுடைய மனக்கலக்கமும், பயமும் எனக்கு மிக நன்றாகப் புரிகிறது. எளிதில் சேர்ந்துவிடும் ஆண்கள் இருக்கும் வரையில், அவர்களை தங்களுக்கு சாதகமாக உபயோகப்படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பவாத பெண்களும் இருக்கத்தான் செய்வர். உன் கணவர் உனக்கு இழைத்தது - மிகப்பெரிய நம்பிக்கை துரோகம் தான். இல்லையென்று நான் சொல்லவே இல்லை. ஆனாலும் கண்ணம்மா... இதுபோன்ற சபலபுத்திக்காரர்கள் பலர், தங்களது தவறுகளை உணராமல், தங்களது புத்திசாலித்தனத்தை உபயோகப்படுத்துவர். மனைவிக்குத் தெரியாமல் எப்படி எல்லாம் - எந்தப் பெண்களிடம் எல்லாம் தவறான முறையில் தொடர்பு வைத்துக் கொள்ளலாம் என்று திட்டம் தீட்டுவர். மனம் மாறுவதோ, செய்த தப்புக்காக மனம் திருந்துவதோ, செய்த தவறுக்காக வருத்தப்படுவதோ கிடையாது. மிஞ்சிப் போனால், "நான் அப்படித்தான் இருப்பேன்; இஷ்டமிருந்தால் இரு... இல்லாவிட்டால் அப்பன் வீட்டுக்கு நடையைக் கட்டு' இப்படி சொல்கிறவர்கள் தான் ஏராளம். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பது போல, ஏதோ ஒரு சில மனிதர்கள் தாம் தெரியாத்தனமாய் சகதியில் கால் வைத்து, சிறுமைப்பட்டு விட்டோமே என்று கூசிக் குறுகி விடுவர். தங்களுக்குள்ளேயே நத்தை ஓட்டுக்குள் சுருங்குவது போல் சுருங்கி, தன் மீது வாரி இறைக்கப்பட்ட அவமானக் கறையை துடைப்பதற்காக, மிகுந்த முயற்சிகள் எடுத்துக் கொள்வர். நேரத்தோடு வீட்டுக்குத் திரும்புவதும், தொலைபேசியில் யாருடனும் அதிகம் அரட்டை அடிக்காமலும், நண்பர்களின் வீட்டு கல்யாணம், பிறந்தநாள் விழா போன்ற வைபவங்களுக்கு கண்டிப்பாய் மனைவியையும் அழைத்துக் கொண்டு தான் செல்வான். காரணம், அவனுக்குள் தன்னை அறியாமலேயே ஒரு பயம், ஒரு மிரட்சி எல்லாம் இருக்கும். இப்படிப்பட்டவர்கள் ஆபீசில் வேலை இருந்து கொஞ்சம், "லேட்' ஆனாலும் கூட, வீட்டிற்கு வந்ததும் வராததுமாய், படபடப்புடன் தான் தாமதமாக வந்ததின் காரணத்தை தகுந்த ஆதாரங்களுடன் மனைவியிடம் நிரூபிக்கப் பார்ப்பான். செய்த குற்றம் நினைவுக்கு வரும்போதெல்லாம், அவன் தானே போய் இந்த மனச்சிறைக்குள் அமர்ந்து, கதவையும் தானே இறுக தாளிட்டு குமுறுவான்... கதறுவான்... வெட்கப்பட்டு தனக்குள் அழுவான். அப்படி குமுறி, கதறி, வெட்கி அழுபவன்தான் மனிதன். செய்த தவறை உணராதவன் வெறும் பதர். உன் கணவர் ஓரளவுக்கு சூடுபட்ட பூனையாகவே இருக்கிறார். மனசுக்குள் வருத்தப்பட்டு பாரம் சுமந்து கொண்டிருக்கிறார். எந்த தவறுக்கும் மன்னிப்பு என்று ஒன்று உண்டல்லவா? மன்னிக்கத் தெரிந்திருப்பதால் தான் இன்றைக்கும் நம் நாட்டில் பல அதிசயங்கள், அரசியலில் இருந்து அடுப்படி வரையில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. மனிதன் திருந்துவதற்கு நாம் சந்தர்ப்பம் அளித்தால் மட்டும் போதாது. அப்படித் திருந்தியவனை, மனசார ஏற்றுக்கொள்ள வேண்டும். நடந்து போனவைகளையே நினைத்து நினைத்து மனம் புழுங்கி, நீயும் அவஸ்தைப்பட்டு, உன் கணவரையும் வார்த்தைகளால் குதறி ரணப்படுத்தாதே! ஊர் மாற்றல் கிடைக்கும்போது கிடைக்கட்டும். வீட்டை வேண்டுமானால் மாற்று. கணவரிடம் இன்னும் கொஞ்சம் அக்கறை எடுத்துக்கொள். நம் மனசுக்குள் கடவுள் இருக்கிறார். அவருக்கு உருவம் கிடையாது. உன்னிடம் இருக்கும் கடவுள் உன்னைப் போலவும், என்னிடம் இருக்கும் கடவுள் என்னைப் போலவும் இருக்கிறார். புரியவில்லையா? எப்பொழுது நீ தவறு செய்த கணவனையும் புரிந்து கொண்டு அன்பாய் அரவணைக்கிறாயோ, அப்பொழுது நீ தான் தெய்வம். இதைத்தான் கவியரசர், "மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...' என்று எளிமையாக சொல்லியிருக்கிறார். இறந்த காலத்தை அசை போடாதே... கசப்புத்தான் மிச்சமாகும். எதிர்காலத்தைப் பற்றி பயப்படாதே... கவலை தான் மிச்சமாகும். நிகழ்காலத்தில் மட்டுமே வாழப்பார். ஆம்... இந்தத் தருணத்தை எப்படி உபயோகமாக, நல்ல முறையில் சந்தோஷமாக செலவிட முடியுமோ அப்படி செலவிடு. — என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத். *** |
Labels: News
comment closed